நீல நிறம், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து அமைதியாக வாழ வழிவகை செய்யும். மன அமைதியைப் பெருக்கி சந்தோஷ எண்ணங்களை ஏற்படுத்துவது இந்நிறத்தின் சிறப்பம்சம் என்று கூறலாம்.
நோபல் விருதில் பதக்கங்களைக் கட்டி தாங்கிய துணி நீலம். ஐ.நா சபையின் அலுவலகச் சின்னங்களின் நிறம் நீலம். தெளிவான சிந்தனைக்கும், செயலுக்கும் நீலம் உதவும். இது வானத்தின் நிறம். நீலவானத்தைப் பார்த்தாலே மன அமைதி ஏற்பட்டு சோர்வுகளைப் போக்குகிறது. மனம் சந்தோஷத்தில் நிறைந்து ஒருவித பிரமிப்பில் லயித்துவிடுவோம். நீலவானம் அதிசயத்தக்க ஒரு வண்ணம்.
பள்ளிகளில் பெரும்பாலும் சீருடைகளுக்கு நீலம் பயன்படுத்துவதின் நோக்கம் ஒழுங்கு, கட்டுப்பாடு சீரான நடவடிக்கைகளை செயல்படுத்த இந்த வண்ணம் மனரீதியாக அவர்களை நடைமுறைப்படுத்தி செயல்பட வைக்கிறது என நம்புகிறார்கள். அதனால்தான் இதையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மேலும் பொன் நகைகளினூடேயும், தங்க ஜரிகைகளிலும் இந்த வண்ணம் அதிகம் உபயோகப்படுத்திவருகிறார்கள். படுக்கையறையில் இந்த நிற பல்பை கோடைக்காலங்களில் போட்டுத் தூங்கினால் உடலும் அறையும் மிகவும் குளிர்ந்த தன்மையை ஏற்படுத்தும். மூளை நரம்புகளை, மிருதுவான இந்த நீல நிறம் அமைதிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதனால் கோடைக்கால இரவுக்குப் பொருத்தமான இரவு நேர வெளிச்சத்திற்கு இது மிகவும் உகந்தது. அமைதியான உறக்கம் தரும். இனிமையான கனவுகளையும் சந்தோஷத்தையும் தரும்.
உஷ்ணப்பிரதேசத்தில் உள்ளவர்களும் வெயில் காலங்களிலும் நீல வண்ண உடையணிந்து வெளியே சென்றால், சூரிய கதிர்களுக்கு எதிராகச் செயல்பட்டு நம்மை வெப்பத்திலிருந்து காக்கிறது. மற்றவர்களின் கண்களுக்கு மிக குளிர்ச்சியான பார்வையையும், எண்ணத்தையும் தந்து நல்ல மதிப்பீடு ஏற்பட வைக்கும்.
நீல நிற உடையுடன் வெயிலில் செல்லும்போது களைப்பு தெரியாமலிருக்கும். பகலில் கண்களுக்குப் பளிச்செனத் தெரிவதால், நீல நிறப் ப்ளைன் புடவைகள் அதிகக் கவர்ச்சிகரமாகப் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும். கதைகளில், நாவல்களில் கூட கதாசிரியர் கதையின் நாயகி நீல வண்ணப் புடவையில் அவனைக் கிறங்கடித்தாள், மயக்கினாள், மயங்கிப்போனாள், என்றும் வானத்து தேவதையாக தெரிந்தாள் என அவளின் கவர்ச்சியை, அழகை அதிகமாக வர்ணிப்பார்கள். உண்மையில் சிவந்த, வெள்ளை நிறமுடைய பெண்களுக்கு நீல நிறம் அவளால் நீல நிறத்திற்கு அழகா, நீல நிறத்திற்கு இவளால் கூடுதல் அழகா எனத் திகைத்துப் போகும்படி பிரமிப்பை ஊட்டும்.
சிவப்பு தீய எண்ணங்களைத் தூண்டும் உணர்வை ஏற்படுத்தினால் நீல நிறம் சமாதானம் போன்ற ஆறுதலை அளிக்கவல்லது.
நீல நிறம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள், அடுத்த மாதம் . . .