நம் மனம் நம் வசம் இல்லை என்றால் காலப்போக்கில் நம் கைவசம் எதுவுமே இல்லாமல் போய்விடும். பார்ப்பதையெல்லாம் இது தேவையா? இல்லையா? என யோசிக்காமல் வாங்க ஆரம்பித்தோமானால் நம் கைவசம் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போய்விடும். இரண்டு கால்களுடன் வந்த பணம் போகும்போது பலகால்களுடன் போய்விடும்.
சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. சம்பாதித்ததைக் காப்பாற்றுவதுதான் பெரிய விஷயம். நிறைய சம்பாதிப்பவர் பணக்காரர் அல்ல. நிறைய சேமிப்பவரே பணக்காரர். நீங்கள் சம்பாதித்ததில் சிக்கனப்படுத்தி சேமித்து, கைவசம் வைத்துள்ள பணம் உங்களைப் பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் கவசம் என்பதை என்றும் மறக்காதீர்கள்.
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் குணமும் முக்கியம். எனக்குத் தெரிந்த ஒரு பெண் மற்றவரிடம் பேசும்போது தன் கணவரைப்பற்றி வாய் ஓயாது ஒரே குறைகளாக அவிழ்த்து விடுவார். அது அநாகரிகம் என்பதுகூடத் தெரியாமல், கூடவே தான் சரியாக நடந்துகொண்டதையும் அதிகமாக வலியுறுத்திப்பேசுவார். நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கிறமாதிரி இல்லை.
எப்படிச் சமைத்தாலும் தன் கணவர் குறை சொல்கிறார் என்பார். “என் சமையலில் என்ன குறை. எந்த மாதிரி ருசி இருந்தால் விரும்புவீர்கள்” என்று உங்கள் கணவர் நல்ல மூடில் இருக்கும்போது சாமர்த்தியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமில்லையா? என்பேன். “ம்ஹூம் அதெல்லாம் இவரிடம் பலிக்காது. சுத்த மோசமானவர். என் வாழ்க்கையே இவரால் வீணாகப்போய்விட்டது” என்பார். இவரைத் திருத்துவது யாரோ? பல சமயங்களில் இருவரும் சேர்ந்து வெளியே ஜாலியாகச் செல்வார்கள். இப்படிச் குறை சொல்லியே இரண்டு குழந்தைகளையும் பெற்றுகொண்டாகிவிட்டது. என்ன வாழ்க்கை இது, கணவர் சரியில்லையே என்று இருவரும் பிரிந்தா போய்விட்டார்கள்? இந்தப்பெண்ணுக்கும் சாமர்த்தியம் போதாது என்பேன்.
பல குடும்பங்களில் இந்த ஈகோ பிரச்சனை வேறு இருக்கிறது. சண்டைபோடுவதற்கு முந்தும் இவர்கள் சமாதானத்திற்கு மட்டும் பின் தங்குவது ஏனோ? கணவன், மனைவி இருவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை பட்டுப்போகாது. நீங்கள் பணம் கொடுத்து வாங்கிய பொருட்களை மட்டும் கடமையே என பகிர்ந்து வாழ்க்கை நடத்தினால், அன்பு என்ற வார்த்தையை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டியதாகிவிடும். அன்பை அள்ளித்தர கணவனோ, மனைவியோ யோசிக்காதீர்கள். இனிமையான இல்லறத்தை-பலரும் புகழும் மணவாழ்க்கையை, மணம் கமழும் வாழ்க்கையாக வாழ, நம் வசம் அன்பு என்ற ஒன்று கவசமாக இருப்பதை உணருங்கள். இதை மறந்து வாழ்வதால்தான் நாம் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
எதையெல்லாம் நம் கைவசம் வைத்திருக்கக்கூடாதோ, அதைத்தான் நாம் பெரும்பாலும் நம் உடன்பிறப்பாக வைத்திருக்கிறோம். கோபம், போட்டி, பொறாமை, கவலை, வெறுப்பு, சோர்வு, சோம்பல், ஓயாத உறக்கம், வாய் ஓயாமல் எதையாவது கொறிப்பது, பேசுவது, வீணாகப் பொழுதை கழிப்பது மேலும் முழு நேர ஆக்கிரமிப்பாக சின்னத்திரை வேறு. பொழுது போக எந்நேரமும் TV பார்த்தால் நம் வாழ்க்கை பழுதாகிவிடும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
பெரும்பாலும் நாம் தீயவைகளை சீக்கிரம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படிக் கற்றதை விட மறுக்கிறோம். அவைகளையே பின்பற்றி பிறகு வாழ்க்கையை வெறுக்கிறோம். அதிலிருந்து மீள முடியாமல் நம் கைவசம் ஒன்றுமே இல்லையா? இந்த உலகில் தனியாகத் தவிக்கப்போகிறோமோ என்ற பயம் நம்மை ஆட்கொள்கிறது. இதனால் சிலருக்கு டிப்ரஷன் என்ற மனச்சிதைவு ஏற்பட்டு, அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பும் அதிகம். உங்களை இந்த உணர்வுகளுக்கு ஆட்படுத்தியவர் யார்? நீங்களேதான்.
நீங்களேதான் இந்த துன்பங்களுக்குக் காரணம். உங்கள் மனம் உங்கள் வசம் இல்லையென்றால் எல்லாமே கையை விட்டுப்போய்விட்டதோ என்ற அச்சத்தை நீங்களேதான் ஏற்படுத்திக் கொண்டீர்கள். தான் என்ற தலைக்கனம்தான் இதற்கெல்லாம் காரணம்.
மகன், மகள், கணவன், மனைவி மற்றும் உங்களைச்சார்ந்த – உங்களது நட்பு நீடிக்கவேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரிடமுமே நீங்கள் உங்கள் அகங்காரத்தைக் குறைத்து, சிறிது சிறிதாக அதைத் துரத்திவிடுங்கள்.
துயரமாக இருக்கும்போது, அதற்குள் ஆழமாக மூழ்கி, இந்தத் துயரம் யாரால்? எப்படி? எதனால்? எதற்காக? எங்கேயிருந்து வந்தது என உங்களை நீங்களே குடைந்து, ஆராய்ந்து விடை தேடுங்கள். உங்கள் கைவசமிருந்த உணர்வுகள், உங்கள் திறமைகள், தன்மைகள், உடைமைகள், நேரங்கள் எல்லாம் உங்கள் வசமில்லாது போனதை உணர்வீர்கள்.
இன்பமாக இருக்கும்போதும் இதே கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். சந்தோஷத்திற்கு காரணம் என்ன என்று உங்கள் உள்ளுணர்வைக் கேட்டுப்பாருங்கள். உள்ளம் முழுக்க அனுபவித்துப் பாருங்கள். உங்கள் வசம் பல நல்ல தன்மைகள், திறமைகள் இருப்பதை உங்கள் மனம் சிறிது சிறிதாகப் புலப்படவைக்கும். அந்தத் தன்மையில் அப்படியே அமிழ்ந்து கண்களைமூடி என்னிடம் இது அப்படியே இருக்கவேண்டும் என உங்கள் உள்மனதிற்கு இனிமையாகக் குரல் எழுப்புங்கள். உங்கள் வசம் பல நல்ல பண்புகள் இருக்க, மனம் பக்குவப்பட தியானம் போன்ற கலைகளை கற்றுப்பயனடையுங்கள். உங்கள் கைவசமிருக்கும் எதுவுமே உங்களைவிட்டுப் போகாது.
இன்னும் நம் கைவசம் சிலவற்றை நாம் கடைபிடித்து வந்தால் அவைகள் நம்மைக் கவசமாகக் காக்கும்.
நம்மிடம் உதடுகளில் எப்போதும் புன்னகை தவழவேண்டும். உடையும், தோற்றமும் எளிமையாக அதேசமயம் பளிச்சென இருக்கவேண்டும். நம் முகபாவங்களில் நல்ல இனிமையான உணர்வுகளைக் காட்டவேண்டும். நம் செய்கைகள் பொது இடங்களான ஹோட்டல்கள், விழாக்களில் மோசமான சேஷ்டைகளாக இல்லாது பண்பான செய்கைகளாக இருக்கட்டும். அப்போதுதான் நல்ல பல நட்புகள் நம்மைத் தொடரும், புதிய உறவுகள் துவங்கத் தலைப்படும். இவையெல்லாம் எதிர்மறையாக இருந்தால் பணம் மட்டுமல்ல நல்ல பண்புகளும் நம் வசமில்லாது நம்மைவிட்டுப் பறந்தோடிவிடும்.
நம்முடைய எதிப்புச்சக்தி குறையும்போது, நாம் பல நோய்களால் தாக்கப்படுகிறோம். அதுபோல உழைப்பு, சுறுசுறுப்பு, நற்பண்புகள் இவற்றை கடைபிடிக்காவிட்டால் பல தீய பழக்கங்களும் அதைத் தொடர்ந்து பல தீய மனிதர்களின் நட்பும் நம்மை வசப்படுத்திவிடும்.
ஒரு தொழிலை நடத்தும்போது நாம் முக்கியமாக கவனித்து தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டியவைகளை இப்போது கவனிப்போம்.
நம்முடைய தற்போதைய நிலை, இதில் மனத்தெளிவு, உடல் ஆரோக்கியம், உங்கள் தொழிலுக்கு உதவியாக உங்கள் அருகாமையில் யாரெல்லாம் இருக்கிறார்கள், அதிக அலைச்சலாகி பிஸியாகிவிட்டால் சமாளிக்கமுடியுமா? வீட்டிற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பானதா? போன்றவற்றை சிந்திக்கவேண்டும்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது நாம் தேர்ந்தெடுக்கும் காலம் மிகச்சரியானதுதானா என்பது. பொறிகடலையும், உப்பும் விற்கப்போனால் மழை வருகிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது என்ற கதையாக ஆகிவிடாமல் இருக்கவேண்டும். பண்டிகை இல்லாத மாதங்களில் ஒரு ஸ்வீட் கடையையோ, ஜவுளிக்கடையையோ துவங்கினால், யார் வருவார்கள் என பாதைகளையே பார்த்து சலிப்படைந்து போவீர்கள். மழைக்காலங்களில் இலை சுருட்டுப்புழுக்கள் அதிகமாக இருக்கும் கீரை விற்பனை, பழ விற்பனை, ஐஸ்க்ரீம் கடை வைத்து தொழிலின் ஆரம்பத்திலேயே உடைந்துபோனவர்கள்தான் அதிகம்.
நமது வியாபாரம் பற்றிய தெளிவான சிந்தனையும் விழிப்புணர்வும் கொண்ட அறிவாற்றல்தான் நம்முடைய பலமான சொத்து. கூடவே இன்முகத்தையும் துணிவையும் துணைக்கழைத்துக் கொள்ளுங்கள். சிரிக்கத்தெரியாதவன் கடைவைக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இவையெல்லாம்தான் நம் தொழிலை திறம்பட நிர்வகிக்க நமக்குக் கவசங்களாக இருந்து நமக்குப் பாதுகாப்பு அளிப்பவை.
ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபோவதாக இருந்தாலும், புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலும் அதன் மூன்றுகால சூழலையும் கவனித்து குடிபோக வேண்டும். காலையில் அந்தப்பகுதி எப்படிப்பட்ட சூழலில் உள்ளது? கூச்சல் குழப்பம் உள்ள பகுதியா? என்பதை ஆராயுங்கள். பகல் வேளையில் அமைதியாக உள்ளதா? போக்குவரத்துகள் அதிகம் உள்ளதா? என்பதை கவனியுங்கள். இரவுச்சூழலில் எப்போழுது ஜன நடமாட்டம் குறைகிறது? எதுவரை நீடிக்கிறது? திருட்டு பயமில்லாத இடமா? பாதுகாப்பான இடந்தானா? எனபதையெல்லாம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும். இதையெல்லாம் பார்க்காமல் குடிபோனபின், “ஐயோ ராத்திரி வேளை பயமாயிருக்கு. தெரியாம இந்த வீட்டிற்கு வந்து விட்டோம். ஒரே சண்டை, கூச்சல் உள்ள ஏரியா. ஏன் வந்தோம் என்றிருக்கிறது.” என்று பின்னால் வருத்தப் படக்கூடாது.
நினைத்த நேரத்தில் தேவையா இல்லையா? என யோசிக்காமல் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவதாலும், கவனமில்லாமல் பட்டன்களை அழுத்தியதால் செல்லும் பல ராங் கால்களாலும் பணம் கட்ட இயலாத அளவுக்கு தொலைபேசிக்கட்டணம் எகிறிவிடுகிறது. நம் கைகள் நம் வசமில்லாமல் செய்யும் வேலைதான் இதற்குக் காரணம்.
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் குடிதண்ணீருக்கென்று இருக்கும் மோட்டரை வெகுநேரம் ஓடவிட்டு, தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியே போகும்படியும், அளவுக்கதிகமாக செடிகளுக்குப் ஊற்றியும் வீணாக்குவார். மாலை ஐந்து மணிக்கே லைட்டைப் போட்டுவிடுவார். லஷ்மி தன் வீட்டிற்குத்தான் முதலில் வர வேண்டுமாம். சின்னத்திரைதான் வாழ்க்கை என்று தவறாகப் புரிந்து கொண்டு அதிலேயே பொழுதைப் போக்குவார். இதையெல்லாம் செய்த பிறகு, “கரண்ட் பில் அநியாயதிற்கும் அதிகமாக வருகிறது?” என்று குற்றத்தை மின்சாரத் துறை மீது போட்டுவிடுவார். இதற்குக் காரணம் மனம் நம் வசம் இல்லாததுதான்.
வெளியே செல்லும்போது உங்கள் ஹாண்ட் பேக்கில், நீங்கள் மிகவும் அழுக்காகிக் களைத்து சோர்வாகிப் போகும்போது குறைந்தது கை, கால், முகத்தையாவது கழுவிக்கொள்ள ஒரு சிறிய கையடக்கமான டவல், முகப்பூச்சுக்குப் பவுடர், ஸ்டிக்கர் பொட்டு/ சாந்து, ஒரு ஐப்ரோ பென்சில், தலை சீவ ஒரு சீப்பு, மூடித் திறக்கும் படியான முகம் பார்க்கும் சின்னக்கண்ணாடி என வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பளிச்சென உங்களை வைத்துக் கொள்ளலாம்.
சட்டை, பேண்ட்/ ப்ளவுஸ், சுடிதார் என தையல் போனாலோ, கிழிந்து விட்டாலோ அல்லது ஹூக், பட்டன் போனாலோ அவசர சூழலில் பாட்டிகொண்டு முழிக்காமல் இருக்க ஊசி மற்றும் ப்ரவுன், கறுப்பு, வெள்ளை நூல்கண்டை வைத்துக்கொண்டால் தைத்துக் கொள்ளலாம். இது பஸ், இரயில், உள்ளூர் என எப்போதும் உபயோகப்படும்.
சில தலைவலி மாத்திரைகள், கை, கால், மூட்டு பிடிக்காமல் இருக்க ‘மூவ்’ ஆயின்மெண்ட்; எதையும் குறித்துக் கொள்ள கையடக்க நோட்புக், பேனா; தலைக்கு பூ வாங்கினாலோ யாரும் கொடுத்தாலோ அதை வைத்துக்கொள்ள ஹேர்பின்கள், ரப்பர் பேண்ட்கள்; அழுக்கான கைக்குட்டையை மாற்றிக்கொள்ள சில கைகுட்டைகள்; பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாதபோது சப்புக்கொட்டுவதற்கு சில மிட்டாய்கள் என வைத்துக் கொண்டால், அவை எப்போதும் உங்களை உற்சாகமாக வைத்துகொள்ளும் கவசமாக விளங்கும்.
உங்கள் பணப்பையில் நூறிலிருந்து, 50, 20, 10, 5, 2, 1 ரூபாய்களையும் சில்லரைகளாக 25, 50 பைசாக்களையும் வைத்துக்கொள்ளுங்கள். பல இடங்களில் பெரிய நோட்டுகளைக் கொடுத்துவிட்டு சில்லரைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நமது வேலையும் சட்டென முடியும்.
பஸ் பயணத்தில் குமட்டல், வாந்தி வராமலிருக்கவும் மாத்திரைகளை வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் கொஞ்சம் சுத்தமான பழைய துணியையும் கைவசம் வைத்திருங்கள். நீங்கள் உட்காரும் இடம் அழுக்காக இருந்தால் துடைத்து விட்டு அமருவதற்கு வசதியாக இருக்கும்.
பாலிதீன் பைகளை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருங்கள். வழியில் எதை வாங்கினாலும் போட்டுக்கொள்ள வசதியாக இருக்கும். ஒரு சிறிய குடையும் மிக அவசியம். மழையில் நனைந்தோ, வெயிலில் கருத்தோ போக வாய்ப்பில்லாது நம்மைக் காப்பாற்றும். ஆண்கள் கேப் வைத்துக் கொள்ளுங்கள் வெயிலிலிருந்து கண்களும் முகமும் தலைமுடியும் பாதுகாக்கப்படும் (மழைக்கும்தான்)
உங்கள் வீட்டுச் சாவிக்கொத்திலிருக்கும் முக்கிய சாவிகளும் இடம் பெற்றிருப்பது அவசியம். உங்கள் வீட்டு தொலைபேசி எண்கள், முகவரி, அடையாள அட்டையுடன் (ஐடெண்டிடி கார்டு) உங்களின் இரத்த வகை(பிளட் குரூப்) என்ன என்று இருப்பதும் நல்லது. அதேபோல் உங்கள் இரத்த வகையுடன் ஒத்துபோகும் உங்களின் நண்பர்களின் முகவரிகள், தொலைபேசி எண்களையும் வைத்திருங்கள்.
உங்களுக்குத் தெரிந்த காவல் துறையினர், வழக்கறிஞர் மற்றும் மருத்துவரின் தொலைபேசி எண்களும் அதில் இருக்கட்டும். மிக முக்கியமாக நீங்கள் யார்? என்னென்ன சிறப்புகளைப் பெற்றவர் என்பதையும் உங்களுக்குத் தெரிந்த விஐபி யார் என்பதையும் எழுதி வைத்திருக்கவும். உங்களுக்கு எந்தெந்த ஊரில் உதவக்கூடிய நிலையில் நண்பர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். அவசர காலங்களில் இவர்கள் மிகவும் உதவுவார்கள்.
இப்போது சொன்ன அத்தனை விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதோடல்லாமல் இவற்றை எப்போதும் உங்கள் கை வசம் வைத்திருப்பீர்களேயானால் இவையெல்லாம் உங்களின் ஆபத்துக் காலங்களிலும் விபத்து நேரங்களிலும் கவசங்களைப்போல் உங்களைப் பாதுகாக்கும்.