தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் ‘மெய்யான இந்துமதம்’ மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது ‘ஞானாச்சாரியார்’ அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் ‘எண்வகை ஆச்சாரியார்களில்’
1. பரமாச்சாரியார் 48 பேர்,
2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர்,
3. சிவாச்சாரியார் 48 பேர்,
4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர்,
5. ஈசுவராச்சாரியார் 48 பேர்,
6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர்,
7. சங்கராச்சாரியார் 40 பேர்,
8. ஆதிசங்கராச்சாரியார் 31 பேர்
தோன்றிவிட்டார்கள். எனவேதான், இவர் தமது காலத்தில் யாராவது ஓர் ஆச்சாரியார் தோன்றுவதற்குப் பெருமுயற்சிகள் செய்தார். அதன் பயனாகத்தான், சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சீர்காழித் திருஞான சம்பந்தப் பெருமானின் பாரம்பரியத்தில் வந்த சிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் கருணீக்க சைவ வேளாள மரபில் சேரநாட்டுக் காலடியில் 32வது ஆதிசங்கராச்சாரியார் தோன்றினார். ஆனால், ஞானாச்சாரியார் எதிர்பார்த்த பயன் விளையவில்லை. ஏனெனில், இந்த 32வது ஆதிசங்கராச்சாரியாரின் புலமையும், உழைப்பும்; கடைச்சங்கப் புலவர்களான ஆதிவால்மீகி, ஆதிவியாசர் முதலியோரின் உழைப்பும், புலமையும் மெய்யான இந்துமதத்துக்கு எதிரான பயனை விளைவித்தது போல் விளைவித்துவிட்டன. எனவேதான், இவர், தமது குருபாரம்பரியத்தில் ஆதிசங்கராச்சாரியார் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் ஆதிசங்கராச்சாரியார் பற்றி நிறையக் குறிப்பிடுகின்றார்கள். எனவேதான், 32வது ஆதிசங்கராச்சாரியாரின் வரலாறு மிகப் பெரிய அளவில் விரிவாக எழுதப்பட்டுப் பதினெண் சித்தர் மடத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இனியாவது, ‘தமிழின மொழி மத விடுதலை’ முயற்சி தொடர்கதையாகி விடக்கூடாது. ஒவ்வொரு தமிழரும் தங்களின் ஞானாச்சாரியார், குருபீடம், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞானசபைத் தலைவர், அருளுலக வழிகாட்டி, வழித்துணை, சமுதாயத் தத்துவ நாயகம், அரசியலின் அருளாட்சி நாயகம் யாரென்பதை நன்கு எண்ணிச் செயல்பட வேண்டும். இன்னுமுள்ள இக்கலியுக 4,26,887 ஆண்டுகளிலாவது தமிழர்கள் தக்க தலைமையையும், வழிகாட்டியையும், வழித்துணையையும் பெற்றுச் சிறக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் தான் அருளுலகின் மூலவர்களாக, காவலர்களாக, வாரிசுகளாக, தத்துவ வித்துக்களாக, செயல்சித்தாந்த நாற்றுப்பண்ணைகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். எனவே, உலக அளவில் மானுட இனங்களும், மொழிகளும், மதங்களும் விடுதலை வாழ்வு பெற்றுச் சிறந்திட உழைத்திடும் பொற்காலம் உருவாகிடத் தமிழின மொழி மத விடுதலை முயற்சி விரைவில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.
‘தமிழின விடுதலையே உலக இனங்களின் விடுதலை’
‘தமிழ் மொழியின் விடுதலையே உலக மொழிகளின் விடுதலை’
‘தமிழர் மத விடுதலையே உலக மதங்களின் விடுதலை’
(நிறைந்தது.)